• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை

கனடா

கனடாவின் காலிங்வுட் மாகாண காவல்துறை, அண்மையில் புதிய கைப்பேசிகளை கொள்வனுவு செய்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய மோசடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கள் புதிய கைப்பேசிகளை வாங்கிய உடனேயே, தங்களுக்கு மோசடி அழைப்புகள் வருவதாகப் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், தாங்கள் மொபைல் சேவை வழங்கும் நிறுவனம் சார்பாகப் பேசுவதாகக் கூறுகின்றனர்.

பின்னர், கைப்பேசிகளின் முழுமையான அமைப்புகளை முடிப்பதற்காக, வாங்கிய சாதனத்தைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறுகின்றனர்.

மற்றொரு சில சம்பவங்களில், மொபைல் போனுக்கு தள்ளுபடிகள் அல்லது சலுகைகள் வழங்குவதாகக் கூறி கைப்பேசிகளைத் திருப்பி அனுப்பினால் சலுகை விலையில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்த ஏமாற்று வேலைகளை உண்மையென்று நம்பும் மக்கள், தங்கள் கைப்பேசிகளை கூரியர் மூலமாகவோ அல்லது நேரில் வரும் ஒரு நபரிடமோ ஒப்படைத்து விடுகின்றனர்.

ஆனால், அவ்வாறு ஒப்படைக்கப்படும் போன்கள் மீண்டும் ஒருபோதும் திருப்பித் தரப்படுவதில்லை. சமீபத்தில் வாங்கப்பட்ட மின்னணு சாதனங்கள் (Electronics) தொடர்பாக வரும் தேவையற்ற அழைப்புகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

யாராவது உங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் மொபைல் சேவை நிறுவனம் சார்பாகப் பேசுவதாகக் கூறினால், அதை அப்படியே நம்ப வேண்டாம். உங்கள் மொபைல் பில்லில் உள்ள எண் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி, நீங்களாகவே நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அந்த கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு காவல்துறை பரிந்துரைக்கிறது. 
 

Leave a Reply