தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு
இலங்கை
சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் தலைவர் கோமகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அச்சத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், சிறைச்சாலைகளில் கைதிகளும் மனிதர்களே என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அங்கு கைதிகள் மீது மிலேச்சத்தனமான கொடுமைகளே அரங்கேற்றப்படுகின்றன எனவும் அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளமையை மேற்கோள் காட்டி தெரிவித்தார்.
இதேவேளை, கைதிகள் யாராகவும் இருக்கலாம். ஆனால் அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்வது அவசியம் எனவும் இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் தற்போது சிறைச்சாலைகளில் நிலவும் இவ்வாறான வன்முறைச் சூழலை நோக்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் , அவர்களது பாதுகாப்பு தற்போது பெரும் கேள்விக் குறியாகியுள்ளது என சுட்டிக்காட்டிய அவர்,
இவ்வாறான சூழலில் சிறைச்சாலைகளுக்குள் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கையும், அங்கு இடம்பெறும் மனித உரிமை மீறல்களையும் அவர் இதன்போது கடுமையாகச் சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





















