கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை
இலங்கை
நாட்டின் சில கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
அத்துடன் அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, கடற்சார் மற்றும் மீனவச் சமூகங்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் , கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பில் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.























