• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

இலங்கை

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று (12) அதிகாலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதனால், விமானம் மீண்டும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கே (BIA) திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விமான நிலையப் பணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL-606 என்ற விமானமே சிட்னிக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை சுமார் 1:00 மணியளவில் புறப்பட்டது.

விபத்து நடந்த நேரத்தில், அகலமான உடலைக் கொண்ட ஏர்பஸ் A330 ரக விமானமானத்தில் 217 பயணிகளும் 16 பணியாளர்களும் இருந்தனர்.

அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை மற்றும் மின்னல் காரணமாக, விமானப் பயணத்தின்போது விமானம் மின்னலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானி பயணத்தை இரத்து செய்ய முடிவு செய்து, அதிகாலை சுமார் 1:40 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

பயணிகளை சிட்னிக்கு ஏற்றிச் செல்வதற்காக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பின்னர் அதே வகையைச் சேர்ந்த மற்றொரு ஏர்பஸ் ஏ330 விமானத்திற்கு ஏற்பாடு செய்ததாக விமான நிலையப் பணி அதிகாரி தெரிவித்தார். 

அந்த மாற்று விமானம் இன்று காலை சுமார் 6:06 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இதற்கிடையில், மின்னல் தாக்கிய விமானம் ஆய்வு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொட்டகைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Leave a Reply