• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் பணவீக்கம் 7% வரை உயரக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

இலங்கை

மத்திய கிழக்கில் தொடரும் மோதல் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக நாட்டின் பணவீக்க விகிதம் 7% ஆக அதிகரிக்கக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

சிங்கள செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்,

மத்திய கிழக்கு மோதல் ஆரம்பத்தில் குறுகிய காலத்தில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் நீடித்த காலம் இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

தற்போது சுமார் 5.4% முதல் 5.5% வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள பணவீக்கம், தற்போதைய போக்குகள் தொடர்ந்தால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம், அதே நேரத்தில் நுகர்வோர் தேவையில் குறிப்பிடத்தக்க சரிவு எதுவும் ஏற்படவில்லை. 

எனவே, இந்த நிலைமைகள் தொடர்ந்தால், பணவீக்கம் 5 சதவீதத்தைத் தாண்டி 7 சதவீதத்தைக்கூட எட்டும் அபாயம் உள்ளது.

பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய வங்கி அண்மையில் தனது பணவியல் கொள்கையைக் கடுமையாக்கியுள்ளது.

பணவீக்கம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், வரும் மாதங்களில் தேவையைக் குறைப்பது அவசியமாகும்.

இதற்கிடையில், சட்டப்பூர்வமாக ஈட்டப்பட்ட நிதிகளை இலங்கைக்கு முறைசார்ந்த வங்கி அமைப்பின் மூலம் அனுப்புவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

அந்த வகையில், சட்டப்பூர்வமான வழிகளில் ஈட்டப்பட்ட எந்தவொரு பணமும், நாட்டின் பணமோசடி தடுப்பு விதிமுறைகளுக்கு இணங்கும் பட்சத்தில், இலங்கைக்கு சிரமமின்றி அனுப்பப்படலாம்.

இருப்பினும், சட்டவிரோதமான வழிகளில் பெறப்பட்ட நிதிகள் சட்ட மற்றும் ஒழுங்குமுறைத் தடைகளை எதிர்கொள்ளும் – என்றார்.
 

Leave a Reply