• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க புதிய திட்டம் - ட்ரம்பின் அறிவிப்பு

இலங்கை

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றநிலையைக் கருத்தில் கொண்டு, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க புதிய திட்டம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள முற்றுகை காரணமாக, ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலைமை உலகளாவிய அளவில் மசகு எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை, உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதன் மூடல், எண்ணெய் ஏற்றுமதி மற்றும் பல அத்தியாவசிய பொருட்களின் சர்வதேச விநியோகச் சங்கிலியில் இடையூறுகளை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, புதிய திட்டத்தின் கீழ், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடரப்படும், எரிசக்தி விநியோகத்தை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போன்ற நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள், சர்வதேச சந்தையில் எரிசக்தி விநியோகத்தை நிலைநிறுத்துவதற்காக முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் மீது அழுத்தம் செலுத்துவதற்காக பல்வேறு இராஜதந்திர மற்றும் கொள்கை அடிப்படையிலான முயற்சிகளையும் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக சிரேஷ்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முன்னேற்றங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

Leave a Reply