நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை
இலங்கை
சித்திரை புத்தாண்டு மற்றும் நுவரெலியா 2026 வசந்த காலத்தையொட்டி இன்று (09) நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் நுவரெலியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நுவரெலியா நகரில் செயற்படும் உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள் , வீதியோர விற்பனை நிலையங்கள் மற்றும் அவற்றில் தயாரிக்கப்படும் உணவின் தரம் தொடர்பான பரிசோதனை இதன்போது மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
குறிப்பாக சமையலறை, உணவு சேமிப்பு பகுதிகள், மற்றும் உணவு கையாளும் ஊழியர்களின் சுகாதாரம், பாழடைந்த உணவுகள், காலாவதியான பொருட்கள் மற்றும் கலப்படங்கள் கண்டறியப்பட்டு பரிசோதிக்கப்பட்டன
இதன்போது மனித பாவனைக்கு உதவாத பல பொருட்கள் அழிக்கப்பட்டதுடன், திகதி காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.
உரிய சுகாதார முறைகள் பின்பற்றப்படாத உணவகங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் திடீரென சுற்றிவளைக்கப்பட்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென, நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் நுவரெலியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது























