வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்
இலங்கை
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சில வெளிநாட்டுப் பயணிகள் திட்டமிட்டபடி நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் விளைவாக, பல சுற்றுலாப் பயணிகள் தமது விசா காலம் முடிவடைவதற்குள் வெளியேற முடியாத அபாயத்தை எதிர்நோக்கினர்.
இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கிற்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா நீடிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் இலங்கையில் சட்டப்பூர்வமாகத் தங்கியிருக்கும் அதேவேளை, மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்ய அவர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்குவதே இதன் நோக்கமாகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக, வரும் நாட்களில் விமான ரத்துக்கள் தொடருமானால், மேலும் 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா நீடிப்பு வழங்குவதற்காகப் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு மாற்று விமானங்களைப் பெற்றுக்கொள்ளும் வரை, நாட்டில் சிக்கியுள்ள பயணிகள் சட்டப்பூர்வமாகத் தங்கியிருப்பதை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.























