அமெரிக்காவில் பரபரப்பு - நியூயார்க் மேயர் மம்தானி வீட்டின் வெளியே குண்டுவீச்சு
அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோரான் மம்தானி கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
நியூ யார்க்கின் மேயராக பதவியேற்ற முதல் முஸ்லீம் என்ற பெருமையை அவர் பெற்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக மம்தானி விமர்சித்தும் வருகுறார்.
இந்த சூழலில் நியூ யார்க்கில் மம்தானி இல்லத்திற்கு வெளியே, வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் போர் நடந்து வரும் சூழலில் மம்தானி இல்லத்தின் முன் முஸ்லிம்களுக்கு எதிராக வலதுசாரிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவை இஸ்லாம் மயமாக்குவதை நிறுத்த வேண்டும், நியூ யார்க்கில் பொது இடங்களில் தொழுகை நடத்தும் உரிமையை பறிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
அப்போது போராட்டக்காரர்கள் இருந்த திசையை நோக்கி ஒரு மர்ம நபர் வெடிகுண்டை வீசியுள்ளார்.
முதல் குண்டு காவல்துறையினருக்கு சில அடி தூரத்தில் விழுந்து அணைந்து போனது. உடனே குண்டு வீசிய நபர் அங்கிருந்து ஓடிச் சென்று மற்றொரு நபரிடம் இருந்து இரண்டாவது வெடிகுண்டைப் பெற்றார்.
அந்த நபர் இரண்டாவது குண்டைப் பற்றவைத்து ஓடிவந்து வீச முயன்றபோது, போலீசார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குண்டை வீசியவர் 18 வயது அமீர் பாலத் மற்றும் அவருக்கு உதவியவர் 19 வயது இப்ராஹிம் நிக் என்பது தெரியவந்துள்ளது.
குண்டு வீசப்பட்ட போது மேயர் மம்தானியும் அவரது மனைவி ரமா துவஜியும் வீட்டில் இருந்தார்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் மேயர் மீதான கொலை முயற்சி என்று வேகமாகப் பரவி வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.























