ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி
இலங்கை
அனைத்து தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தையும் நாட்டையும் விடுவித்து, ஒழுக்க நெறி மற்றும் கருணை உள்ள எதிர்காலத் தலைமுறையையும் முன்னேற்றகரமான நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக, உறுதியுடன் முன்னோக்கிச் செல்லும் எமது பயணத்தில் முன்னோடிகளாக வலுவாக கைகோர்க்குமாறு அனைத்துப் பெண்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செயதிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இலங்கையில், பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக பெண்களின் வகிபாகம் தனித்துவமானது.
இந்தத் துறைகள் அனைத்திலும் பெரும் பொறுப்பைச் சுமக்கும் பெண்களின் அந்த வகிபாகத்தை பாராட்டி, பெண்களின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை இந்நாளில் குறிப்பாக நினைவுகூர்ந்தாலும், அதனை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட முடியாது என்பதை நாம் நம்புகிறோம்.
இந்நாட்டின் மக்கள் தொகையில் 52% பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் தலைமுறை, இன்று நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது இரகசியமல்ல.
ஊதியம் பெறாத இல்லத்தரசிகள் என்ற வகையில் அவர்கள் மேற்கொள்ளும் வகிபாகத்திற்கு மேலதிகமாக, ஆடைக் கைத்தொழில், பெருந்தோட்டத் தொழிற்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் சேவைத் துறைகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்கிறார்கள்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் ஒரு நாடாக நாம் அடைந்த பல பொருளாதார வெற்றிகளுக்கு பெண்கள் வழங்கிய பலம் முக்கிய பங்கு வகித்தது என்பதையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
சமூக நீதிக்காக ஆண்- பெண் சமூக சமத்துவத்தை உறுதிசெய்து, பொருளாதார செயல்பாட்டில் மேலும் தீவிரமாகவும் செயற்திறனாகவும் பங்கேற்கச் செய்யும் திட்டங்களை நாம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறோம்.
நீதியான சமூகம், சுதந்திரமான நாடு மற்றும் சுதந்திரமான பெண் என்ற அபிலாஷையை அடைதல்,வீட்டிலும், போக்குவரத்தின் போதும், சமூகத்திலும், வேலைத்தளத்திலும், அரசியல் களத்திலும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக செயல்படவும், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் தேவையான கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் என்ற வகையில் நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.
பாராளுமன்ற வரலாற்றை மாற்றும் வகையில், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
மேலும், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மலையக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒரு தனித்துவமான வரலாற்று நிகழ்வாகும்.
இந்த வகையில், நாட்டை பொருளாதார, அரசியல், மற்றும் சமூக ரீதியாக புதிய மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல நாம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்திற்கு சமமாக அர்ப்பணிப்புடன் செயல்படும் வலுவான மற்றும் கௌரவத்துக்குரிய பெண்களின் தலைமுறையை உருவாக்குவது எமது பொறுப்பும் உறுதிப்பாடும் ஆகும் என்பதை வலியுறுத்துகிறோம்.
மேலும், டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தில் பெண்களின் தொழில்முயற்சியை விரிவுபடுத்தி, எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதும் எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இத்தகைய சூழலில், இலங்கைப் பெண்களின் பெருமையையும் வலிமையையும் உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், ‘பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்தமைக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தையும் நாட்டையும் விடுவித்து, ஒழுக்க நெறி மற்றும் கருணை உள்ள எதிர்காலத் தலைமுறையையும் முன்னேற்றகரமான நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக, உறுதியுடன் முன்னோக்கிச் செல்லும் எமது பயணத்தில் முன்னோடிகளாக வலுவாக கைகோர்க்குமாறு அனைத்துப் பெண்களுக்கும் அழைப்பு விடுப்பதோடு அர்த்தமுள்ள மகளிர் தினத்திற்கான எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் – என்றும் கூறியுள்ளார்.






















