டித்வா சூறாவளி இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம்- அதிர்ச்சியூட்டும் சேத அறிக்கை
இலங்கை
அண்மைய சூறாவளியால் ஏற்பட்ட விரிவான சேதத்தைத் தொடர்ந்து, இலங்கையின் 1,593 கிலோ மீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோ மீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக உள்ளது என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
பல மாவட்டங்களில் போக்குவரத்து, விவசாயம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றை புயல் கடுமையாக பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விவசாய சேவைகள் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 1,777 குளங்கள், 483 அணைகள், 1,936 கால்வாய்கள் மற்றும் 328 விவசாய வீதிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 137,265 ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் 305 சிறு நீர்ப்பாசன கால்வாய்களும் அழிக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகார சபை தடைபட்ட 246 வீதிகளை மீண்டும் திறந்துள்ளது, ஆனால் நாடு முழுவதும் 22 பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
ஊவா மாகாணத்தில் ஆறு பாலங்கள், வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் தலா நான்கு பாலங்கள், மேற்கு மாகாணத்தில் மூன்று பாலங்கள், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தலா இரண்டு பாலங்கள் மற்றும் வடமத்திய மாகாணத்தில் ஒரு பாலம் சேதமடைந்துள்ளன.
தொலைத்தொடர்பு மீட்பு 91 சதவீதமாக உள்ளது, இருப்பினும் நுவரெலியா மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்ட 16,178 துணை மின் நிலையங்களில் 11,315 மீண்டும் இயக்கப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட 3,531,841 இணைப்புகளில் 72 சதவீதம் பேர் – 2,526,264 நுகர்வோருக்கு மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அரநாயக்காவில் போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு வசிப்பவர்களுக்கு உலர் உணவு விமானம் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
மேலும் அப்பகுதியில் உள்ள மருத்துவ குழுக்களுக்கு மேலதிக ஆதரவு வழங்கப்பட்டது.
நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை , நீர்வள வாரியம், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், நீர்ப்பாசனத் திணைக்களம், மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கட்டமைப்பு ஸ்திரத்தன்மையை மதிப்பிடுவதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர் – என்றும் அவர் கூறினார்.






















