பேரிடரினால் உயிரிழப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்வு
இலங்கை
இன்று (03) காலை 10.00 மணி நிலவரப்படி, இலங்கையின் பேரிடர் இறப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் 356 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
டித்வா சூறாவளி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய அறிக்கை வெளிக்காட்டுகிறது.
40,358 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், 971 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,385 பாதுகாப்பு மையங்களில் மொத்தம் 53,758 குடும்பங்கள், 201,875 பேர் தற்போது தங்கியுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வதற்கான வசதிகள் மேம்படுவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.






















