ஜோ பைடன், கமலா ஹாரிஸ் செய்த குளறுபடி - குற்றம்சாட்டும் ஜனாதிபதி ட்ரம்ப்
சினிமா
புலம்பெயர்ந்தோரை எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அனுமதித்து, ஜோ பைடன், கமலா ஹாரிஸ் குளறுபடி செய்து நாட்டை கெடுத்து விட்டனர் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே, ஆப்கனைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தேசிய காவல் படையைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இரு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதில், பெக்ஸ்ட்ரோம், 20, என்ற வீராங்கனை முதலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
பின்னர் அவர், அங்கீகரிக்கப்படாத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது, வெளிநாட்டினர் மீதான சோதனையை தீவிரப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக வைத்து, தன் குடியேற்ற கொள்கையை மறுசீரமைப்பதாக அறிவித்தார்.
தற்போது, இந்த சம்பவத்திற்கு ஜோ பைடன் தலைமையிலான ஆட்சியை ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட பதிவு: மோசமான ஜோ பைடன், 'எல்லை மன்னர்' என்று அழைக்கப்படும் கமலா ஹாரிஸ் ஆகியோர் புலம்பெயர்ந்தோரை எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அனுமதித்து, குளறுபடி செய்து நாட்டை கெடுத்து விட்டனர். இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
























