இத்தாலியில் எட்னா எரிமலை திடீரென வெடித்ததால் பீதி.. உயிரை கையில் பிடித்து ஓடிய மக்கள்
இத்தாலியின் சிசிலி தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை இன்று (திங்கட்கிழமை) திடீரென வெடித்தது. எரிமலை வெடித்ததால் அருகிலுள்ள பகுதிகளில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பீதியில் ஓடினர்.
தகவலறிந்து மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றினர். எரிமலையிலிருந்து ஆபத்தான வாயுக்கள் வெளியேறி வருகிறது.
சில மணிநேரங்களாக எரிமலையிலிருந்து சாம்பல் வெளியேறி வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், மேலும் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மவுண்ட் எட்னா கடந்த ஐந்து ஆண்டுகளாக எரிமலை தொடர்ந்து பலமுறை வெடித்து வருவதாக இத்தாலியின் புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.






















