கன்னட மொழி குறித்து கமல் பேசியதில் உடன்பாடு இல்லை - பல்டி அடித்த சிவராஜ்குமார்
சினிமா
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
அந்தவகையில் சென்னையில் நடந்த தக் லைஃப் பட புரொமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டார்.
இதில் பேசிய கமல், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று தெரிவித்தார்.
கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறியதால் கமல் மீது கன்னட அமைப்புகள் கடுங்கோபத்தில் உள்ளன. இந்த விஷயத்தில் அம்மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக கைகோர்த்து கமலை விமர்சித்து வருகின்றன.
கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசன், அவருக்கு அது தெரியாது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிவராஜ்குமார் பேசியுள்ளார் அதில் " கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல்ஹாசன் பேசிய நிலையில் ஆதரவு. நீங்கள் கன்னட மொழிக்கு என்ன செய்துள்ளீர்கள்?" கண்டனம் தெரிவித்தவர்களுக்கு சிவராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்
"சர்ச்சை எழும்போது குரல் எழுப்பாமல் எப்போதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும்" என கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று நடிகர் சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியதை நான் சரி என சொல்லவில்லை. கன்னடம், தமிழ் குறித்து பேசும் போது இசை வெளியிட்டு விழாவில் பங்கேற்ற நான் கைதட்டியது உண்மை தான். அந்த சந்தர்ப்பத்தில் கன்னட மொழி குறித்து அவர் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. கன்னட மொழி மீது எனக்கு மிகுந்த கவுரவம், மரியாதை உள்ளது. எனது தந்தை கன்னட மொழி மீது வைத்திருந்த பற்று குறித்து உங்களுக்கு நன்கு தெரியும்.
இதையும் படியுங்கள்: சரியாக பதிலளிக்காததற்கு நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே சூர்யா
நடிகர் கமல்ஹாசன் பேசிய போது, மேடையில் அமர்ந்திருந்த நான், அங்கேயே இதுபற்றி பேசாதது குறித்து கேட்கிறீர்கள். அவர் பேசியது சரியாக கேட்கவில்லை. கன்னட மொழி குறித்து பேசியது குறித்து கமல்ஹாசனிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன பேசினார் என்பதை 2-வது முறையாக கேட்ட போது தான் எனக்கே புரிந்தது. அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை." என கூறியுள்ளார்.
இப்படி நேற்று முந்தினம் ஒரு கருத்தும், இன்று ஒரு கருத்தும் கூறும் நடிகர் சிவராஜ்குமாரின் மீது நெட்டிசன்கள் அவர்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர். இதன் மூலம் கன்னட அமைப்பினர் எவ்வளவு நெருக்கடி மற்றும் சிக்கல்களை சிவராஜ்குமார் மீது சுமத்திருப்பர் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.





















