பொலிஸ் அதிகாரங்களில் திருத்தம் செய்யப்பட்ட விசேட வர்த்தமானி வெளியீடு
இலங்கை
பிரதிப்பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதிப்பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பிரதிபொலிஸ் மா அதிபர்களுக்கு அதற்கு கீழ் உள்ள பதவிநிலைகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிகளை பதவிகளில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பதவி நிலைகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்வதற்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்குமான அதிகாரம் பிரதிபொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் பரிசோதகர்கள் அவர்களினால் நிரர்வாக எல்லைக்குட்பட்ட பதவி நிலைகளில் கடமையாற்றுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பதவி உயர்வு இடமாற்றம் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கை பணிநீக்கம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் எழுத்துமூலம் மேன்முறையீடு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






















