கனடாவின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண்கள்
கனடா
கனடாவின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் மற்றும் கமல் கேரா கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
லிபரல் கட்சியின் தலைவராக இருந்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக பணியாற்றிய மார்க் கார்னி, கனடாவின் 30-வது அமைச்சரவையை ஏற்படுத்தினார்.
ஆளுநர் மேரி சைமன் தலைமையில் நடந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் பதவியேற்றனர்.
அனிதா ஆனந்த் (58) - கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கமல் கேரா (36) - சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை வகிக்கிறார்.
டெல்லியில் பிறந்த கேரா தனது பள்ளிப்படிப்பிற்குப் பிறகு குடும்பத்துடன் கனடா குடிபெயர்ந்தார். யார்க் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்றார்.
2015-ஆம் ஆண்டு முதல் Brampton West தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஒரு பதிவு பெற்ற நர்ஸாக பணியாற்றிய அவர், கோவிட்-19 நோய்த்தொற்றின் முதல் அலையில், பாதிக்கப்பட்ட முதியோர் இல்லங்களில் சேவையாற்றினார்.
நோவா ஸ்கோஷியாவில் பிறந்து வளர்ந்த ஆனந்த், 1985-ஆம் ஆண்டு ஒன்ராறியோ மாநிலத்திற்கு குடிபெயர்ந்தார்.
அரசியல் நிபுணர், சட்டவியலாளர் என பன்முக திறமைகள் கொண்டவர். முன்னதாக தேசிய பாதுகாப்பு அமைச்சர், பொது சேவை மற்றும் கொள்முதல் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.
அமைச்சரவை குறைந்த எண்ணிக்கையிலான 13 ஆண்கள், 11 பெண்கள் என உருவாக்கப்பட்டுள்ளதாக மார்க் கார்னி அறிவித்தார்.
























