உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியல் - 3-வது இடம் பிடித்த பாகிஸ்தான்
சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.கியூ.ஏர்-ன் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியாகி இருக்கிறது.
அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.
உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அசாமில் உள்ள பைர்னிஹாட், டெல்லி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர், நொய்டா ஆகிய 13 நகரங்கள் அதிக மாசுபட்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. உலகில் மாசுபட்ட தலைநகரங்களில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது.
அதேநேரத்தில், உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் 2023-ல் 3வது இடத்தில் இருந்த இந்தியா, 2024ல் 5-வது இடத்திற்கு சென்றுள்ளது. இதன்படி உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புகை மூட்டம் நிலவியது. குறிப்பாக பஞ்சாபில் நிலைமை பேரிடர் என அறிவிக்கப்பட்டு, சுமார் 2 மில்லியன் மக்கள் உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற வேண்டியிருந்தது.
மாசுபாட்டை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றில் ஊரடங்கு உத்தரவுகளை விதித்தல் மற்றும் பள்ளிகளை மூடுதல் ஆகியவை அடங்கும்.
சர்வதேச நுண்ணறிவு நிறுவனமான இப்சோஸின் அறிக்கையின்படி, பாகிஸ்தானில் 10 பேரில் ஏழு பேர் புகைமூட்டம் காரணமாக உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டனர் என தெரிவித்துள்ளது.






















