சிட்னி தாக்குதல்தாரியின் அடையாளம் தெரிந்தது - வெளிவரும் புதிய பின்னணி
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர வணிக வளாகம் ஒன்றில் கொடூர தாக்குதலை முன்னெடுத்த ஆயுததாரியின் அடையாளம் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிசாரால் அந்த நபர் கொல்லப்பட்ட நிலையில், 40 வயதான Joel Cauchi என்பவரே தாக்குதலை முன்னெடுத்தவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசல் மிகுந்த வணிக வளாகத்தில் நடந்து சென்ற அந்த நபர் கத்தியால் தாக்கி 5 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரை சாகடித்துள்ளார். இந்த சம்பவத்தில் 9 மாத குழந்தை உட்பட பலர் காயங்களுடன் தப்பினர்.
அனைவரும் மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவியல் பாதிப்பு காரணமாக அந்த நபர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறன்று வெளியான தரவுகளின் அடிப்படையில், நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை உதவி ஆணையர் அந்தோனி குக் கூறுகையில், இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்க முயற்சி செய்வதாகவே குறிப்பிட்டுள்ளார்.
அதில் இருவருக்கு அவுஸ்திரேலியாவில் குடும்ப உறுப்பினர்கள் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.