• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இப்படி ஒரு படத்தை மிஸ் பண்ணிட்டோமே.. பிரபல நடிகர்கள் மிஸ் செய்த படங்கள்..!

சினிமா

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட்டான படங்கள் தங்களை தேடி வந்த போதும் சில நடிகர்கள் அந்த படங்களை மிஸ் செய்து விட்ட  துரதிஷ்டமான  சம்பவங்களை தான் தற்போது பார்க்க போகிறோம்.

சில நடிகர்கள் எடுத்த தவறான முடிவின் காரணமாகவும், சில படங்கள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் வெற்றி படங்கள் கை நழுவி போகும். அப்படிப்பட்ட ஹீரோக்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவந்த மண். புரட்சிகரமான கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் முதலில் எம்ஜிஆர் நடிப்பதாக இருந்தது. எம்ஜிஆர் கதை கேட்டு ஓகே கூறுகிறார். ஆனால் இந்த படத்தில் அதிகமான சென்டிமென்ட் காட்சிகள் இருந்ததை அடுத்து இந்த படத்தில் நான் நடிப்பதை விட சிவாஜி கணேசன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் பரிந்துரை செய்ததை அடுத்து சிவாஜிகணேசன் இந்த படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆகியது.

அதேபோல் அதே ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான உரிமை குரல் என்ற திரைப்படம் கடந்த  1974ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நடிக்க முதலில் சிவாஜி இடம் தான் ஸ்ரீதர் அணுகினார். ஆனால் இந்த படத்தில் தான் நடிப்பதை விட எம்ஜிஆர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று  சிவாஜி கணேசன் கூறியதை அடுத்து எம்ஜிஆர் இந்த படத்தில் நடித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த திரைப்படம் பைரவி. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தால் நாங்கள் தயாரிக்க மாட்டோம் எனவும், விஜயகுமாரை ஹீரோவாக்குங்கள் என்றும் பல தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். இதுவரை வில்லனாகவே நடித்து வந்த ரஜினிகாந்தை மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் பல தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் இந்த படத்தில் ரஜினி தான் நடிப்பார் என்று பிடிவாதமாக இயக்குனர் கூறியதால் ரஜினி நடித்தார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். முதல் முதலாக தமிழில் வந்த ஒரு திரில் கதையம்சம் கொண்ட படம் இது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் கமல்ஹாசன் கேரக்டரில் முதலில் சிவக்குமார் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் இந்த கேரக்டரில் நடித்தால் தன்னுடைய இமேஜ் கெட்டுப் போய்விடும் என்று அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் அதன் பிறகு கமல்ஹாசன் நடித்ததாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய காவிய படங்களில் ஒன்று மௌன ராகம். இந்த படத்திற்கு பிறகு தான் மணிரத்னம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் ரேவதி கேரக்டரில் முதலில் நடிகை இருந்தவர் நதியா. ஆனால் அவர் அப்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் இந்த படத்தை மிஸ் செய்து விட்டார். இந்த படத்தில் மட்டும் நதியா நடித்திருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மணிரத்னம் இயக்கிய இன்னொரு திரைப்படம் ரோஜா. இந்த படம்தான் முதல் பான் இந்தியா திரைப்படம். இந்த படத்தில் நாயகியாக நடிக்க முதலில் லட்சுமி மகள் ஐஸ்வர்யாவிடம் தான் பேசப்பட்டது. ஆனால் அவர் இந்த படத்தை மிஸ் செய்ததன் காரணமாகவே மதுமிதா இந்த படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

அதேபோல் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கார்த்திக் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் சுரேஷ். ஆனால் அதன் பிறகு கார்த்திக் இந்த படத்தில் நடிக்க வந்தார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த முதல் மரியாதை திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் பாடகர் எஸ்பிபி. ஆனால் அதன் பிறகு சிவாஜி கணேசன் இந்த படத்தில் நடித்தார்.

விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை திரைப்படம் சூப்பர் ஹிட் என்பதும் ஆர்கே செல்வமணி இயக்கிய முதல் திரைப்படம் இதுதான் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் விஜயகாந்த் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் சத்யராஜ் என்றும் அதன் பிறகு தான் விஜயகாந்த் இந்த படத்திற்கு வந்தார் என்றும் கூறப்பட்டது.

பிரபுவின் 100வது படத்தை தேர்வு செய்யும் பொறுப்பு சிவாஜி கணேசனுக்கு வந்தது. அப்போது கேஎஸ் ரவிக்குமார் மூன்று கதைகளை கூறினார். அதில் ஒன்று நாட்டாமை கதை. ஆனால் நாட்டாமை கதை வேண்டாம் என்று  ராஜகுமாரன் கதையை தான் நூறாவது படமாக சிவாஜி தேர்வு செய்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் நாட்டாமை படத்தில் சரத்குமார் நடித்து சூப்பர் ஹிட்டாகியது. இந்த படத்தில் பிரபு நடிப்பது மிஸ் ஆகிவிட்டது.

தமிழில் மிகப்பெரிய ஹிட்டான படங்களில் ஒன்று சுப்பிரமணியபுரம். இந்த படத்தில் ஜெய் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது பாக்யராஜ் மகன் சாந்தனு தான். ஆனால் பாக்யராஜ் இந்த படத்தின் கதையை சரியில்லை என்று கூறியதை அடுத்து ஜெய் அந்த கேரக்டரில் நடித்தார். இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று புகழப்பட்ட பாக்யராஜ் இந்த படத்தின் வெற்றியை முன்கூட்டியே கணிக்கத் தவறியது சாந்தனுவின் துரதிஷ்டம்தான்.

தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தில்’ திரைப்படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் இந்த படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை என விஜய் கூறியதை அடுத்துதான் விக்ரம் நடித்தார். விஜய் மிஸ் செய்த சூப்பர்ஹிட் படம் இதுதான்.

அதே போல் சூர்யா நடித்த கஜினி திரைப்படத்தில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஜித் அந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து சூர்யா நடித்தார். இதே போல் பல வெற்றிப் திரைப்படங்களை நடிகர்கள் மிஸ் செய்து உள்ளார்கள்.
 

Leave a Reply