• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படம் வெளியான மூன்றே நாளில் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்.. வசந்த மாளிகை படத்தின் அறியாத தகவல்..!

சினிமா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ என்ற திரைப்படம் கடந்த  1972ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சென்னை மதுரை போன்ற பெரு நகரங்களில் 700 நாட்கள் தொடர்ச்சியாக ஓடியது.

தமிழக முழுவதும் 100 நாட்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி சாதனை செய்த படம். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சிவாஜி கணேசன் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாததால் 3 நாளில் மாற்றப்பட்டது.

ஜமீன்தார் வீட்டு வாரிசான ஆனந்த்  ஒரு பிளேபாயாக இருப்பார். மது மற்றும் மாதுவில் மூழ்கி இருக்கும் ஆனந்த் விமானத்தில் செல்லும் போது அங்கு பணிபுரியும் லதா என்ற பணிப்பெண்ணை பார்ப்பார். அவருடன் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து அவருக்கு தன்னுடைய பர்சனல் செகரட்டரி என்ற பணியை கொடுப்பார். இது ஆனந்தின் குடும்பத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்.

இந்த நிலையில்  ஆனந்த் மற்றும் லதாவுக்கு ஒரு கட்டத்தில் காதல் ஏற்படும். ஆனந்தின் குடிப்பழக்கத்தையும் மாது பழக்கத்தையும் லதா தன் அன்பால் நிறுத்துவார். ஆனந்த் குடும்பத்தினர்களும் லதா மீது அன்பு செலுத்துவார்கள்.

இந்த நிலையில் தான் ஆனந்த் வீட்டில் ஒரு நெக்லஸ் காணாமல் போன நிலையில் அந்த நெக்லஸை லதா தான் எடுத்திருக்கிறார் என்று குடும்பத்தினர் அனைவரும் பழி சொல்வார்கள். அப்போது லதாவின் அம்மா இந்த நெக்லஸ் எங்கள் வீட்டிலிருந்தது, தெரியாமல் லதா எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் என்று கொண்டு வந்து கொடுப்பார். அப்போது  ஆனந்த் லதாவிடம் ‘ஏன் இப்படி செஞ்ச’ என்று கேட்பார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லதா, தன்னை திருடி என்று தனது காதலரே நினைத்துவிட்டாரே என்று ஆனந்தை விட்டு பிரிகிறார். ஒரு கட்டத்தில் லதாவுக்கு அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்க்க திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வாழ்த்து சொல்வதற்காக ஆனந்த் வருவார். அப்போது பெண் வீட்டார் அதை பார்த்து இருவரும் ஏற்கனவே காதலித்தவர்கள் என்று தெரிந்து கொண்டு திருமணத்தை நிறுத்தி விடுவார்கள்.

லதாவுக்கு வாழ்த்து சொல்லிட்டு லதாவுக்காக கட்டிய வசந்த மாளிகைக்கு செல்லும் ஆனந்த் விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்வார். அதை தெரிந்து கொண்ட லதா அவரை காப்பாற்ற வசந்த மாளிகைக்கு சென்ற போது லதாவை பார்த்துவிட்டு ஆனந்த் இறந்து விடுவது போன்று கதை முடிக்கபட்டிருக்கும்.

இந்த படம் வெளியாகிய மூன்றே நாட்களில் சிவாஜி கணேசன் இறந்து விடுவதை ரசிகர்கள் விரும்பவில்லை என்பதால் மீண்டும் சிவாஜி கணேசனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றுவது போன்று கிளைமாக்ஸ் மாற்றியிருப்பார்கள். ஆனால் இலங்கையில் இந்த படம் சிவாஜி கணேசன் கிளைமாக்ஸில் இறப்பது போலவே படத்தை முடித்திருப்பார்கள் என்றும் கூறப்படுவதுண்டு.

கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் கே.வி.மகாதேவன் இசையில் உருவான இந்த  படம் பிரேமா நகர் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காகும். மேலும் இந்த படத்தில் பாலாஜி, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், வி.எஸ்.ராகவன், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் பாலாஜியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். அவர் சிவாஜியின் அண்ணன் மகளாக நடித்திருப்பார்.

1972ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி வெளியான இந்த படம் சென்னையில் 700 நாட்கள் ஓடியது. சாந்தி உள்பட பல தியேட்டர்களில் இந்த படத்திற்கு தினமும் ஹவுஸ்புல் காட்சிகளாக இருந்தது. அதுமட்டுமின்றி இலங்கையில் இந்த படம் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் ஓடியதாக கூறப்படுவதுண்டு. தமிழ் திரைப்படம் ஒன்று தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் இலங்கையில் ஓடியது முதன் முதலில் செய்த சாதனையாகவும் கருதப்பட்டது.

சிவாஜி கணேசன் மற்றும் வாணிஸ்ரீ இருவரின் அற்புதமான நடிப்பு,  கே.எஸ்.பிரகாஷ் ராவ் அவர்களின் அபாரமான திரைக்கதை, சென்டிமென்ட், காதல், நகைச்சுவை என அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும் என்பதால் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

தமிழ் சினிமாவில் 10 அருமையான காதல் படங்களை தேர்வு செய்தால் கண்டிப்பாக அதில் வசந்த மாளிகை இடம் பெற்றிருக்கும். இந்த படத்தை கடந்த 2013ஆம் ஆண்டு டிஜிட்டலில் ரீரிலிஸ் செய்த போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பின் மீண்டும் இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டில் ரீரிலிஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு இந்த படம் மீண்டும் மூன்றாவது முறையாக ரீரிலிஸ் செய்யப்பட்டபோதும் கூட இந்த படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply