• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

இலங்கை

மக்கள் படும் இன்னல்களை எண்ணாமல் மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாரம்மல நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் ஜனாதிபதியாக 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார்.

மக்களை பலிகடாக்கி மக்கள் படும் துன்பங்களையும், வலிகளையும் கருத்தில் கொள்ளாமல், வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை போதாமையினால் மேலும் 200 மில்லியன் ஒதுக்கிக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க – ராஜபக்ச நட்பு வட்டார முதலாளித்துவத்தை கடைப்பிடித்து வருகிறார்.மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப்பணம் ஊழல் மற்றும் மோசடி மூலம் திருடப்படுகின்றது.

இந்த பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்.இதன் மூலம் நாட்டின் வங்குரோத்து நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் நீதி நிலைநாட்டப்படும்.

தற்போதைய அரசாங்கம் முட்டாள்தனமான கொள்கைகளால் நாட்டை அழித்து வருகிறது. நட்பு வட்டார முதலாளித்துவத்தை பின்பற்றும் இந்த அரசாங்கம் மக்கள் சக்தியினால் விரட்டியடிக்கப்படும்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply