• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இசையமைப்பாளரை திட்டி எழுதிய கவிஞர்… அந்தப் பாடலையும் ஹிட் ஆக்கிய மெலடி கிங்

சினிமா

ஆனந்தம் படம் அந்தப் படத்தில் பணியாற்றிய பலருக்கும் வாழ்க்கையில் ஆனந்தம் கிடைக்கச் செய்து வெற்றி பெற்ற ஒரு படம். இயக்குநர் லிங்குசாமிக்கு முதல் படமாகவும், சினேகா, அப்பாஸ் ஆகியோருக்கு திருப்புமுனையாகவும் அமைந்த படம். இப்படத்தில் இடம்பெற்ற பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் கேட்டால் இன்றும் மனதிற்குள் பட்டாம் பச்சி பறக்கும்.

இப்பாடலை இயற்றியவர் கவிஞர் யுகபாரதி. ஹரிணி, உன்னிகிருஷ்ணன் பாடிய இப்பாடாலுக்கு இசையால் உயிர் கொடுத்திருந்தார் இசை வசந்தம் எஸ்.ஏ. ராஜ்குமார். இப்பாடலின் மூலம் முன்னணி கவிஞர்களில் ஒருவராக உருவெடுத்தார் கவிஞர் யுகபாரதி. அதற்கு முன் சில கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆனந்தம் பட இயக்குநர் லிங்குசாமி தனது அடுத்த படத்திற்கும் யுகபாரதியை பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார். அப்படி அவர் வரிகளில் உருவான பாடல் தான் ரன் படத்தில் இடம்பெற்ற காதல் பிசாசே. இப்பாடலை இயற்றுவதற்கு முன் இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் யுகபாரதியை அறிமுகப்படுத்தி வைத்தார் லிங்குசாமி. பிறகு காட்சியைக் கேட்டுவிட்டு மெட்டுப் போட்டவர் யுகபாரதிக்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது காதலன் காதலிக்கு கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால் அதில் அன்புள்ள, மானே, தேனே போன்றவரிகள் இருக்கக் கூடாது என்பது தான்.

குழம்பிப் போனார் யுகபாரதி. வித்யாசாகர் தன்னை நிராகரிப்பதற்காகத்தான் இப்படிச் சொல்கிறார் என நினைத்து இயக்குநரிடம் கேட்க, லிங்குசாமியோ முயற்சி செய்யுங்கள் என்று ஊக்கம் கொடுத்திருக்கிறார். யுகபாரதிக்கு வித்யாசாகர் மேல் கடும் எரிச்சல். எப்படி இந்த வரிகள் இல்லாமல் பாட்டெழுத முடியும் என்று புலம்பிக் கொண்டே வீட்டிற்குச் சென்றவருக்கு திடீரென ஒரு யோசனை தோன்றிற்று.

பக்கத்து வீட்டில் ஒருவரை பிசாசு என திட்டியிருக்கின்றனர். பேனாவை பிடித்தார் யுகபாரதி அடுத்த ஐந்து நிமிடங்களில் பாடல் ரெடியானது. ஆம் வித்யாசாகர் மேல் இருந்த எரிச்சலை எல்லாம் காதலாக மாற்றி காதல் பிசாசேவாக மாற்றினார். மறுநாள் லிங்குசாமியும், யுகபாரதியும் அவரிடம் பாடலைக் கொடுக்க வித்யாசாகர் வரிகளைக் கேட்டுவிட்டு ஓகே சொல்லிவிட்டு பின் இசையமைத்தார்.

காதல் பிசாசே காதல்
பிசாசே ஏதோ சௌக்கியம்
பரவாயில்லை காதல் பிசாசே
காதல் பிசாசே நானும்
அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை
தவிப்புகளும் பரவாயில்லை
கனவென்னை கொத்தி தின்றால்
பரவாயில்லை இரவுகளும்
பரவாயில்லை இம்சைகளும்
பரவாயில்லை இப்படியே
செத்துப் போனால் பரவாயில்லை

இப்படி இசையமைப்பாளரை திட்டி யுகபாரதி காதல் பாட்டாக மாற்றி சுஜாதாவையும், உதித் நாராயணனையும் பாட வைக்க பாடல் ஒரே நாளில் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்தது. அதன்பின் வித்யாசாகர் தான் இசையமைக்கும் பெரும்பாலான படங்களில் யுகபாரதியையே வரிகள் எழுதச் சொல்லியிருக்கிறார். இத்தகவலை மேடை ஒன்றில் கவிஞர் யுகபாரதி பகிர்ந்து கொண்டார்.
 

Leave a Reply