கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் அடித்த அதிர்ஷ்டம் - 50 மில்லியன் டொலர்களை வென்ற கனேடிய குடும்பம்
கனடா
கனேடிய குடும்பம் ஒன்றிற்கு, சரியாக கிறிஸ்துமஸ் நேரத்தில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஆம், லொட்டரியில், அந்த குடும்பத்துக்கு 50 மில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.
கியூபெக்கில் வாழும் நான்சி (Nancy Gauthier), அவரது தாயாகிய Jeannette Boisvert, மற்றும் நான்சியின் தாயுடைய ஆண் நண்பரான Gilles Larouche, என்பவர்கள்தான் கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் கோடீஸ்வரர்களாகியுள்ள கனேடியர்கள்.
லொட்டரியில் 50 மில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்ததும், உடனடியாக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்கள் நான்சியும் அவரது தாயும்.
ஆளை விட்டால் போதும்...
நான்சி வேலை செய்த அலுவலகம், இன்னும் இரண்டு வாரமாவது வேலை செய்யுங்கள் என நான்சியைக் கேட்டுக்கொண்டதாம். ஆனால், இனி வேலை செய்ய மனமில்லை, தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறி, வேலையிலிருந்து வெளியேறிவிட்டாராம் நான்சி.
உண்மையில், நான்சியும் அவரது தாயும் மரச்சாமான்கள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தார்கள். பெரும்பாலும் இரவு முழுவதும் வேலை இருக்குமாம். 10 மணி நேர வேலைக்குப் பின், அதிகாலை 2.00 மணிக்குத்தான் வேலை முடியுமாம். அப்படியிருக்கும்போது, கோடீஸ்வரியானபின்பும், அவர்கள் ஏன் அங்கு வேலை செய்யப்போகிறார்கள்...
எதிர்காலத் திட்டம்
இயற்கைக்கு நெருக்கமான ஒரு இடத்தில் சிறிய பண்ணை ஒன்றை வாங்கி அங்கு குடும்பமாக வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளது நான்சி குடும்பம். Gillesக்கு கார் ஒன்று வாங்கும் ஆசை உள்ளதாம். கிறிஸ்துமஸ் நேரத்தில், அருமையான பரிசுதான் கிடைத்துள்ளது அந்தக் குடும்பத்துக்கு!