• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயணிக்கு திடீர் உடல்நலக்குறைவு - இந்திய விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கம்

இந்தியாவின் அகமதாபாத் நகரில் இருந்து துபாய்க்கு போயிங் 737 ரக ஸ்பேஸ் ஜெட் விமானம் நேற்று இரவு புறப்பட்டு சென்றது. அப்போது பயணி ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அருகில் பறந்து கொண்டிருந்தது. இதையடுத்து விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது. பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை விமானத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, அகமதாபாத்தில் இருந்து துபாய்க்கு போயிங் 737 விமானம் சென்றபோது தர்வால் தர்மேஷ் (வயது 27) என்ற பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை அளவு குறைந்து படபடப்பு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு துபாய்க்கு புறப்பட்டது.

கடந்த மாதம் 23-ந்தேதி அன்று ஐதராபாத் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக கராச்சியில் அவசரமாக தரை இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply