• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மிரிஸ்ஸவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இனிப்பு தேங்காய்

இலங்கை

மிரிஸ்ஸ பிரதேசத்தில் சற்று இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் இனங்காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் இவ்வகை இனிப்பு தேங்காய் இனம் இனங்காணப்பட்ட போதிலும், இந்நாட்டில் இவ்வாறானதொரு தேங்காய் இனம் இனங்காணப்படுவது இதுவே முதல் தடவையாகும். மிரிஸ்ஸ பிரதேசத்தில் இந்த வகை தென்னை மரம் ஒன்றே அடையாளம் காணப்பட்டுள்ளது.

சராசரி உயரம் கொண்ட இந்த தென்னை மரத்தில் விளையும் காய்களில் பெரும்பாலானவை சாதாரண தேங்காய்கள் என்றும், சுமார் இரண்டு சதவீத தேங்காய்களின் கூழ் மட்டுமே இனிப்பான சுவை கொண்டது என்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

மேலும், இந்த தேங்காய் சாதாரண தேங்காய் போன்று தோற்றமளித்தாலும், இதன் சதை சாதாரண தேங்காயின் சதையை விட சற்று மென்மையாகவும், நார் தன்மை சற்று குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த இனிப்பு தேங்காய் புதிய தேங்காய் வகையா அல்லது மரபணு மாற்றமா என்பதை இன்னும் கண்டறிய முடியாததால், தென்னை ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்த ஆய்வை தொடங்கியுள்ளது.

மேலும் ,இதுபோன்ற இனிப்பான தேங்காய்கள் அதிகமாக இருந்தால் எங்களுக்குத் தெரிவிக்குமாறு தென்னை ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
 

Leave a Reply