• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐ.சி.சியின் தலைவரை நாடாளுமன்றிற்கு அழைக்க வேண்டும் - சஜித் பிரேமதாச

இலங்கை

நாட்டிற்கு வருகை தரவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்து அனைத்து உண்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று நடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் அடுத்த சில தினங்களில் இலங்கைக்கு வரவுள்ளார்.

அவ்வாறு வருகை தந்ததன் பின்னர் நாடாளுமன்றத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஜனநாயகம் என்ற போர்வையில் பொய் கூறி, இந்நாட்டில் கிரிக்கெட்டை எவ்வாறு அழித்து வருகின்றது என்பதை அவருக்கு விளக்க வேண்டும்.

எனவே ஐ.சி.சி.தலைவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து உண்மை நிலையை புரிந்து கொள்ள வைக்க வேண்டும்.
இல்லையெனில் தவறான கருத்து சர்வதேசத்திற்கு செல்லும்.

ஆகவே சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் நாட்டிற்கு வருகை தந்ததும் நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களையும் அவர் சந்திக்கும் வகையில் சபாநாயகர் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன்.

இல்லாவிட்டால் இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரிடம் வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply