• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாமதமாகும் போர் நிறுத்தம் - பிணைக்கைதிகள் விடுவிப்பு 25-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்ப்பு

இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது.

இதற்கு பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒன்றரை மாதங்களாக நடந்து வரும் போரில் காசா பகுதி சின்னாபின்னமாகி விட்டது. இதற்கிடையே பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.

இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது. இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள், சிறுவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது. இன்று காலை முதல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் புதிய தகவலை வெளியிட்டது.

இது தொடர்பாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹனேஜிபி கூறும்போது, "போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. பிணைக்கைதிகள் விடுதலை வெள்ளிக்கிழமைக்கு முன்பாக நடைபெறாது. இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் அது நாளைக்கு முன்பாக நடைபெற வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் சிறையில் உள்ளவர்களை நாளைக்கு முன்னதாக விடுவிக்க இயலாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை இஸ்ரேல் கேட்டுள்ளது. ஆனால், ஹமாஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்ல என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கு ஹமாஸ் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பது பின்னர்தான் தெரியும்.

ஆனால், பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், பேச்சுவார்த்தையில் அரசின் குறைபாடே காலதாமதத்திற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.

போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு தாமதத்துக்கான காரணம் குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. இஸ்ரேலின் இந்த அறிவிப்பால் பிணைக்கைதிகள் விடுவிப்பு நாளை வரை தாமதம் ஆகி உள்ளது. இதனால் பிணைக்கைதிகள் விடுவிப்பு 25-ந்தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என்று இன்னும் தெளிவாக தெரியாத நிலையில் நேற்று இரவு காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள கான்யூனுஸ் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டன. அதேபோல் வடக்கு காசாவில் அபு இஸ்கந்தர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

Leave a Reply