• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையோரின் நலனைக் கருத்தில் கொண்டு ஆளுநர் அதிரடி உத்தரவு

இலங்கை

வடமாகாணத்தில் உள்ள இளையோர் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான குழுவை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

வட மாகாணத்திலுள்ள கல்வி, சுகாதாரம்,மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது வட மாகாணத்தில் மாணவர்கள் இடைவிலகல் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டுமெனவும், சுமார் 25 வீதமான பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கட்டாயம் தேவைப்படுவதாகவும் கல்வித்துறைசார் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் மாணவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் கவலை தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், விசேடமாக மாணவிகளின் சுகாதார நிலைமை, மாதவிடாய் சிக்கல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்தனர்.

மேலும் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுதல், வீட்டு வன்முறைகளுக்கு ஆளாகுதல், சிறுவர் தொழிலாளர்களாக மாற்றப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆளுநரிடம் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

இந்நிலையில் அதிகாரிகளின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வட மாகாண கல்வி, சுகாதாரம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்களின் செயலாளர்களையும், ஏனைய உயர்மட்ட அதிகாரிகளையும் இணைத்து குழுவை நியமிக்குமாறும், இந்த குழுவின் ஆலோசனைக்கு அமைய துறைசார் குழுக்களையும், உப குழுக்களையும் நியமித்து, சமூக மட்டத்தில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக ஆராய்ந்து, அதற்கு எவ்வாறு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பான பரிந்துரைகளை சமர்பிக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
 

Leave a Reply