• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிபர் தேர்தல் 2024 - புதின் விமர்சகர் முக்கிய அறிவிப்பு

ரஷியாவில், 2024 மார்ச் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

பதவியில் இருந்த ஒருவரே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது ரஷிய அரசியலமைப்பு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த விதிமுறையில் 2020ல் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மாற்றம் கொண்டு வந்தார்.

தற்போதைய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி அதிபர் புதின் மீண்டும் போட்டியிட 2036 வரை தடையேதும் இல்லை.

இந்நிலையில் ரஷிய உளவு பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரியும், புதினை தீவிரமாக விமர்சித்து வருபவருமான ஐகோர் கிர்கின் (52) அதிபர் தேர்தலில் நிற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். கிர்கின் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி புதின் அரசு அவரை சிறையில் அடைத்துள்ளது.

டெலிகிராம் சமூக வலைதளத்தில் ஸ்ட்ரெல்கோவ் எனும் பெயரில் உள்ள தனது அதிகாரபூர்வ கணக்கில் கிர்கின் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அதிபர் தேர்தல் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

தற்போதைய சூழ்நிலையில் ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுவது சீட்டாட்டத்தில் ஏமாற்றுவதில் கைதேர்ந்த ஒருவருடன் சீட்டு விளையாடுவதை போன்றது. ஆனால், நம் நாட்டின் மீது பற்றுள்ள சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம், வரும் தேர்தலில் ஒரே மனிதரே மீண்டும் மீண்டும் தேர்தலில் எதிர்ப்பின்றி வெல்வதற்கான திட்டங்களை தகர்க்க முடியும் என நான் நம்புகிறேன். நாட்டின் முன் நிற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களிலிருந்து தேசத்தை இதன் மூலம் காக்கவும் முடியும். என் ஆதரவாளர்கள் என்னை முன்னிறுத்த பிரசாரத்தை தொடங்க வேண்டும்.

இவ்வாறு கிர்கின் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்ததன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷியாவின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து வந்தவர் கிர்கின் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply