• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்

இலங்கை

”ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” என புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்தில் வேல் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  கொண்டுவரப்பட்ட வரவுசெலவு திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டங்களும் இல்லை. யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல் அவரது வரவுசெலவு திட்டம் அமைந்துள்ளது.

எவ்வித திட்டமிடலும் இல்லாமல் இந்த அரசாங்கம் புதிய வரவு செலவு திட்டத்தில் மக்களை ஏமாற்ற நினைக்கின்றது. ஆண்டாண்டு காலமாக, கே ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இருந்த மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் இந்த வரவுசெலவு திட்டத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. மாறாக இவர்கள் தனியார் கம்பெனிகளை வளைத்து போடுவதற்கும் அவர்களை ஊக்குவிக்கவுமே இந்த திட்டங்களைக்  கொண்டு வருகின்றார்கள்.

இந்த அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தை திருப்தி படுத்துவதற்காக இந்த புதிய வரவுசெலவுத் திட்டத்தை  தயாரித்துள்ளது ஒழிய இது மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத்திட்டம் ஆக இருக்கவில்லை. நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பினை வழங்கி இருக்கின்றது.

இந்த நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைமையை அடைந்தமைக்கு  பசில், மஹிந்த ராஜபக்ஷ ,முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரே காரணம் எனத் தெட்டத் தெளிவாக கூறியிருக்கின்றது.

ஆண்டாண்டு காலமாக இந்த அரசாங்கம், கொண்டுவரும் பொருளாதாரத் திட்டங்கள் அனைத்துமே அடித்தட்டு மக்களின் நலன் சார்ந்ததாக அமைந்திருக்கவில்லை. மாறாக அது மேல்வர்க்கத்தினரை , திருப்திப் படுத்தவும் அவர்களுடைய கண்ணோட்டத்திலுமே இவர்களுடைய பொருளாதாரத் திட்டங்கள் அமைந்துள்ளன.

எனவே ”மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும். இந்த ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply