• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயனாளிகளுக்கு உரிமை தொகை - பிரதமரின் டிஜிட்டல் வாலட் திட்டம்

தாய்லாந்து நாட்டின் கரன்சி பஹ்ட் (baht) என்றழைக்கப்படும். அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளதால், பஹ்ட், மதிப்பிழந்து வருகிறது.

நாட்டின் நிதிநிலைமையை மீண்டும் சீராக்க, 61 வயதான தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் (Srettha Thavisin) பல முயற்சிகளை எடுக்க உள்ளார். அதில் ஒன்றாக அந்நாட்டு மக்கள் 5 கோடி பேருக்கு "டிஜிட்டல் வாலட் ப்ரோக்ராம்" (Digital Wallet Program) எனும் திட்டத்தின்படி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும், 10,000 பஹ்ட் - ரூ.23,323.76 ($280) - மின்னணு முறையில் செலுத்தவிருக்கிறார்.

இதற்கு பயனாளியாக தகுதி பெற விரும்பும் குடிமக்கள், மாதம் 70,000 பஹ்ட்டிற்கு குறைவாக வருமானம் ஈட்ட வேண்டும்; 5 லட்சம் பஹ்ட்டிற்கு குறைவாக வங்கியில் இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

முன்னர் 16 வயதிற்கு மேற்பட்ட 5 கோடியே 60 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதாக இருந்த டிஜிட்டல் வாலட் திட்டத்தின் பயனர்கள் எண்ணிக்கை, சற்று குறைக்கப்பட்டு 5 கோடி பேர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த வருட மே மாதம் முதல் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

மொத்தம் 14 பில்லியன் அமெரிக்க டாலர் இத்திட்டத்திற்காக தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

"இந்த திட்டத்தால் நன்மையை விட தீமையே அதிகம் விளையும்" என அந்நாட்டின் பொருளாதார நிபுணர்களும் முன்னாள் வங்கி உயரதிகாரிகளும் எச்சரித்ததை பிரதமர் ஸ்வெத்தா பொருட்படுத்தவில்லை.

இதற்கான சிறப்பு மசோதாக்கள் அடுத்த வருடம் தாய்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

தனது இந்த முயற்சி, நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மேலே கொண்டு வர உதவும் என பிரதமர் ஸ்ரெத்தா உறுதியாக நம்புகிறார். பிரதமர் ஸ்ரெத்தா, நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் அதிபராக விளங்கிய பெரும் கோடீசுவரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவசமாக மக்களில் பெரும்பகுதியினருக்கு பணம் வழங்குவது குறித்த சாதக-பாதகங்கள் இந்தியாவிலும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த பழக்கம் அயல் நாடுகளிலும் தொடங்கி விட்டதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

Leave a Reply