• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச மாணவர்களுக்கு உணவு தரமுடியாது என்று கூறியுள்ள கனடா உணவு வங்கி 

கனடா

கனடாவுக்கு லட்சக்கணக்கில் வருவாயை உருவாக்கும் சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கமுடியாது என்று கூறியுள்ளது கனேடிய உணவு வங்கி ஒன்று.

கனடாவின் பிராம்ப்டனிலுள்ள Ste. Louise Outreach Centre of Peel என்னும் உணவு வங்கி, சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாது என்று அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்துள்ளது.

உணவு வங்கி நிர்வாகக் குழுவின் தலைவரான கேத்தரின் (Catherine Rivera) என்பவர், செப்டம்பர் மாதத்திலிருந்து ஏராளமான சர்வதேச மாணவர்கள் உணவு வங்கிக்கு உணவு வாங்க வருவதால், தனது வாடிக்கையாளர்களுக்கு போதுமான உணவு மற்றும் பிற பொருட்கள் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், பத்து பேர் வரை பையைத் தூக்கிக்கொண்டு இலவச பொருட்களை வாங்க வந்துவிடுகிறார்கள் என்று கூறும் கேத்தரின், உங்களுக்கெல்லாம் உணவு தரமுடியாது, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச மாணவர்களால் கனடாவுக்கு மிகப்பெரிய வருவாய் கிடைகிறது. உள்ளூர் மாணவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தைவிட, சர்வதேச மாணவர்கள் சுமார் ஆறு மடங்கு வரை அதிக கல்விக்கட்டணம் செலுத்துகிறார்கள்.

ஆனாலும், அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு இந்த உணவு வங்கி மறுத்துள்ளது.

ரொரன்றோவிலுள்ள Etobicoke என்னுமிடத்தில் அமைந்துள்ள Sai Dham food bank என்னும் உணவு வங்கியின் இணை நிறுவனரான விஷால் கன்னா (Vishal Khanna) என்பவர், உணவு வங்கியை நாடும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உண்மைதான் என்கிறார்.

ஆனால், 60,000 டொலர்கள் சம்பளம் வாங்கும் கனேடியர்கள் கூட, தங்கள் உணவு வங்கிக்கு வருவதாகக் கூறும் விஷால், மாதம் ஒன்றிற்கு வெறும் 688 டொலர்களில் சமாளிக்கவேண்டிய நிலையிலுள்ள சர்வதேச மாணவர்கள் என்ன செய்வார்கள் என்கிறார்.

தங்களுக்கு பெரும் வருவாய் வெளிநாட்டவர்களிடமிருந்து வருவது தெரிந்தும், பல்வேறு விடயங்களில் அவர்களை அவமதித்தும், மோசமாக நடத்தியும் வருகிறது கனடா. இதற்கு எப்போது முடிவு வரும் என்பது தெரியவில்லை.
 

Leave a Reply