• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்குனர் விக்ரமன் மனைவியை நேரில் சென்று சந்தித்த அமைச்சர்

சினிமா

1990-ம் ஆண்டு வெளியான 'புது வசந்தம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்ரமன். அதன்பின்னர், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வானத்தைப்போல, பிரியமான தோழி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார். இவர் கடைசியாக கடந்த 2014- ஆம் ஆண்டு வெளியான 'நினைத்தது யாரோ' திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதன்பின் இயக்கத்தில் இவர் பெரிதாக நாட்டம் காட்டவில்லை.

விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையின் தவறான அறுவை சிகிச்சை காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக கால்களை கூட அசைக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். மேலும், இவரை கவனித்துக் கொள்ளவே விக்ரமன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டதாகவும் தன் சொத்துக்களை விற்றுதான் மருத்துவ செலவை பார்ப்பதாகவும் ஜெயப்பிரியா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விக்ரமனின் மனைவியை மருத்துவ குழுவுடன் நேரில் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் விக்ரமன், "என் மனைவிக்கு முதுகில் செய்த தவறான அறுவை சிகிச்சையினால் அவரால் நடக்க முடியவில்லை. என் நிலைமையை விளக்கி ஒரு சேனலுக்கு பேட்டியளித்திருந்தேன்.

இதனை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனையை சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து 25-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் என் மனைவியை நேரில் வந்து பார்த்து பரிசோதித்து நல்ல சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்" என்றார்.
 

Leave a Reply