சிரோ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
சினிமா
அறிமுக இயக்குனர் விவேக் ராஜாராம் எழுதி இயக்கும் திரைப்படம் 'சிரோ'. இந்த படத்தில் மலையாள நடிகர் அக்ஷய் ராதாகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சப்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ரோகிணி, லிஷா சின்னு, நோபல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கும் இப்படத்திற்கு கிஷன் சி.வி. ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 27 அன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. இந்தப் பூஜையில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் கூறியதாவது, 'சிரோ' படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒரே ஷெட்யூலில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மில்லியன் ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் எப்போதும் உயர்தர தொழில்நுட்ப அம்சத்துடன் நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையே உருவாக்க விரும்புகிறோம்.
எங்களின் முதல் தயாரிப்பான 'வெப்பன்' படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரொமோ ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுபோலவே, 'சிரோ' திரைப்படம் மூலம் சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுப்பதற்காக சிறந்த சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ்/அனிமேஷன் கலைஞர்களை இந்த படத்தில் பணிபுரிய வைத்துள்ளோம் என்றார்.