• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிரியாவின் இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா

மத்திய கிழக்கு கடற்பகுதி, ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய படைக்குழு அமெரிக்க துருப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த 17-ந்தேதி அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலின்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 21 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் குணமடைந்து தற்போது பணிக்கு திரும்பியுள்ளனர்.

இதற்கு பதிலடியாக அமெரிக்கா, கிழக்கு சிரியாவில் உள்ள இரண்டு இடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த துல்லியமான தாக்குதல், கடந்த 17-ந்தேதிக்கு பதிலடி என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போருக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

"தற்பாதுகாப்புக்காக குறுகியதாக வடிவமைக்கப்பட்ட இந்த தாக்குதல்கள், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க துருப்புகளை பாதுகாப்பது மட்டுமே நோக்கமாக இருந்தன" என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 

Leave a Reply