• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவின் தாமதத்தால் இலங்கைக்கு IMF உதவி கிடைக்காமல் போகும் அபாயம்

இலங்கை

இலங்கையை சீனா தொடர்ந்து கடனில் வைத்திருப்பதால், சர்வதேச நாணய நிதியத்தின் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளும் தெரிவித்த முக்கிய விடயங்களில் ஒன்று, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெறுவதாகும்.

இருதரப்பு கடனாளர்களிடமிருந்து நிதி உத்தரவாதத்தைப் பெறுவது சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும், ஆனால் இலங்கை இன்னும் அதைச் செய்யவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம் முதல் மீளாய்வில் இலங்கை மீது குற்றம் சுமத்தவில்லை என்றாலும், இலங்கையின் கடன் தொடர்பில் சீனாவின் பின்னடைவு தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக ஆசிய மற்றும் மேற்குலக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இம்மாத நடுப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன விஜயத்தின் போது சீன ஜனாதிபதியை சந்தித்து கடன் தள்ளுபடி தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தியாவிற்கும் மேற்குலகிற்கும் நெருக்கமான கொள்கையை பின்பற்றியதால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை சீனா தடுத்து இலங்கையை தண்டித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், இம்மாத இறுதியில் மொரோக்கோவில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி மாநாட்டிற்கு முன்னதாக, இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையுடன் கடன் குறைப்பு உடன்படிக்கையை மேற்கொள்ளவுள்ளன.

இதேவேளை, இலங்கைக்கு எதிராக நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் Hamilton Reserve Bank Limited தொடுத்துள்ள வழக்கு இடைநிறுத்தப்பட வேண்டும் என Bloomberg இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கை, சட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்துவது கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் வெற்றிபெறவும், நிதி சலுகைகளை உறுதிப்படுத்தவும் இலங்கைக்கு உதவும் என்று சுட்டிக்காட்டுகிறது.

எவ்வாறாயினும், கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை விரைவில் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply