• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்க வேண்டும் – முதித பீரிஸ்

இலங்கை

ஆயிரம் ரூபாய்வரை உயிர்த்த வேண்டிய இடத்திலேயே 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எரிவாயுவின் விலை இம்மாதம் அதிகரிக்கும் என்பதை நாம் கடந்த மாதமே அவதானித்திருந்தோம்.

இதனால், 10 ஆயிரம் டொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை, இம்மாதத்திற்கும் சேர்த்தே நாம் கொள்வனவு செய்திருந்தோம்.

தற்போது சுமார் 100 டொலர் அளவில் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்புடன், கடந்த மாத அதிகரிப்பையும் சேர்த்துப் பார்க்கையில், 900 முதல் 1000 ரூபாய்வரை அதிகரிப்பு காணப்படுகிறது.

எவ்வாறாயினும், நாம் 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 145 ரூபாய் மட்டும் உயர்த்தியுள்ளோம்.

அத்தோடு, 5 கிலோ சிலிண்டரின் விலையை 55 ரூபாய் உயர்த்தியுள்ளோம். 2.3 கிலோ சிலிண்டர் ஒன்றின் விலையை 26 ரூபாய் உயர்த்தியுள்ளோம்.

கடந்த 7 மாதங்களுக்கும் முன்னர், உலக சந்தையில் தற்போது இருக்கும் இதே விலை தான் அன்றும் காணப்பட்டது.

ஆனால், டொலர் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக நாட்டில் சிலிண்டர் ஒன்று, அப்போது 4186 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்று எமது நிறுவனம் பலமடைந்த காரணத்தினால்தான், மக்களுக்கு சுமையேற்படுத்தாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்து வந்த நாம், நீண்ட காலத்திற்கு பின்னரே விலையை உயர்த்தியுள்ளோம்.

கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ரூபாய்வரை குறைத்தே தற்போது 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம்.

இந்த புதிய விலையானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.

சில இடங்களில் எரிவாயு தட்டுப்பாடு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.- என்றார்.
 

Leave a Reply