• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை

இலங்கை

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள்  அங்கிருந்த குழந்தையொன்றின் கழுத்தில் கத்தியை  வைத்து  தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய்  பகுதியில் உள்ள  வலி.தென் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரின் வீட்டிலேயே நேற்றைய தினம்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று  முகமூடியணிந்திருந்த குறித்த  கொள்ளையர்கள் அங்கிருந்த நான்கு மாதக் குழந்தையின் கழுத்தில்  கத்தியை வைத்து, வீட்டில் இருந்தவர்களை மிரட்டி, 11 பவுண் தங்க நகைகள் , பெறுமதியான 3 கையடக்க தொலைபேசிகள், 2 இலட்ச ரூபாய் பணம் மற்றும் வங்கி புத்தகம் என்பவற்றை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

கொள்ளை கும்பல் தப்பிச் செல்லும் போது, “இது குறித்துப் பொலிஸாருக்கு அறிவித்தால், பின் விளைவுகளைச்  சந்திக்க நேரிடும்” என வீட்டாரை மிரட்டி விட்டு, வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து, தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply