• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சரிதா நடிப்பு ராட்சஷி!

சினிமா

நம் சினிமா உலகில், அதிக நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்களில், முதன்மையானவர் கே.பாலசந்தராகத்தான் இருப்பார். கமலையும் ரஜினியையும் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர்... சரிதா.

தெலுங்குப் படத்தில், ‘மரோசரித்ரா’ வில்தான் பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். அறிமுக நாயகி என்று முடிவு செய்தவர், 150 பேருக்கும் மேலாக டெஸ்ட் செய்தார். அந்த டெஸ்ட்டில் பாஸ் செய்தார் சரிதா. தன் தனி மேனரிஸத்தால், முகபாவத்தால், நடிப்பால் தனி முத்திரை பதித்தார். இத்தனைக்கும் படம் வெளிவந்த முதல்வாரத்திலும் படத்துக்கு முன்னதாகவும் ‘என்னப்பா ஹீரோயின் கருப்பா இருக்காங்க’ என்று கிண்டலும் கேலியும் செய்யப்பட்டதெல்லாம் தனிக்கதை

பிறகு, தெலுங்கின் மூலமாகவே தமிழுக்கும் அறியத் தொடங்கினார். பின்னர், ‘தப்புத்தாளங்கள்’ படத்தில், மிகப்பெரிய உச்சம் தொட்டார். அந்த சரசு கதாபாத்திரத்தை ஏற்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். இன்று வரைக்கும் ’அப்படியான’ கேரக்டரை வேறு எந்த நடிகையும் அனாயசமாகச் செய்யவே இல்லை.

ஒப்படைத்தல். தன்னை முழுமையாக கேரக்டர் மீதும் படத்தின் மீதும் இயக்குநர் மீதும் வைக்கவேண்டும். அப்படி வைத்து நடித்தவர்கள், வெற்றி பெறாமல் இருந்ததே இல்லை. சரிதாவின் ஆரம்ப வெற்றி அப்படித்தான் தொடங்கியது

வசனம் சொல்லவேண்டியதை, சரிதாவின் கண்கள் பாதி சொல்லிவிடும். அவரின் உள்மன உணர்வுகளை அதுவே நமக்கு உணர்த்திவிடும். டி.ஆர்.ராஜகுமாரியின் கண்கள் போதை. ஸ்ரீவித்யாவுக்கும் ஸ்ரீதேவிக்கும் பேசும் கண்கள். சரிதாவின் கண்களும் வசனம் பேசும் கண்கள்.

எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா முதலானோரெல்லாம் ஒரு ஃப்ரேமில் நின்றால், எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள் என்பார்கள். சரிதாவும் அப்படிதான். தன்னருகில் யார் நின்றாலும் சரிதாவின் நடிப்புதான், அந்தக் காட்சியில் ஒளிரும்; மிளிரும்; ஜெயிக்கும். அப்படி ஒளிர்ந்து மிளிர்ந்து ஜெயித்தார். நம் மனசுக்குள் வந்தார் சரிதா.

சிவாஜியுடன் சரிதா நடித்த முக்கியமான படங்களில் ‘துணை’யையும் ‘கீழ்வானம் சிவக்கும்’ படத்தையும் சொல்லவேண்டும். இரண்டு படங்களிலும் சிவாஜிக்கு ஈடுகொடுத்து நடித்ததைச் சொல்லவேண்டும். நடிப்பில், தான் ஒரு ராட்சஷி என்பதை நிரூபித்துக்கொண்டே இருந்தார்.

ஒருகட்டத்தில், நடிப்பதைக் குறைத்துக் கொண்டபோதிலும் இவரின் குரல் மட்டும் நடித்துக் கொண்டே இருந்தது. தன் குரலால், யார் யாரோ நடித்ததற்கெல்லாம் உயிர் கொடுத்தார். பாலுமகேந்திராவின் ‘ஜூலிகணபதி’யில் அப்படியொரு கேரக்டரையும் அசால்ட்டாக நடித்து அசத்தினார்.

சரிதா, யாருடைய இடத்தையும் பிடிக்கவில்லை. ஏனென்றால், சரிதா தனித்துவ நடிப்பால் ஜெயித்தவர். அவரின் இடத்தையும் யாரும் நிரப்பவில்லை. ஏனென்றால், சரித்திர தனித்துவ நாயகி. அவரின் இடத்தை எவரும் நிரப்பவும் முடியாது, ஏனென்றால், சரிதா... நடிப்பு ராட்சஷி

இந்து தமிழ் இதழ்

Leave a Reply