• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

இலங்கை

மன்னாரில், அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் நேற்று மின்சக்தி, மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இதற்கு எதிராக நறுவிலிக்குளம் கிராம மக்களால் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராம பகுதிலேயே இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஹிருரஸ் பவர் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட சுமார் 6 மின் காற்றாலை கோபுரங்களை கொண்ட குறித்த காற்றாலை மின்சக்தி நிலையமானது 15 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வைபவ ரீதியாக நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி சிறுவர்களுக்கு அமைச்சரினால் பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக நறுவிலிக்குளம் கிராம மக்கள் போராட்டமொன்றையும் நேற்று மேற்கொண்டிருந்தனர்.

குறித்த நிலையத்தில் உள்ள காற்றாலை மின் கோபுரத்தினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், இவ்விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு பல தடவை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் வாழும் மக்களின் பெரும்பாலானோர் கடற்றொழிலை நம்பி வாழ்ந்து வருவதாகவும், இந்த நிலையில் இந்த செயற்பாட்டினால் கடற்றொழில் நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்தோடு, காற்றாலை கோபுரங்களில் இருந்து வெளிவரும் சத்தத்தினால் இரவு நேரங்களில் உரிய முறையில் நித்திரை கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தங்களின் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்குள் அமைக்கப்பட்டுள்ள 2 மின் காற்றாலை கோபுரங்களையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply