எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த நியூசிலாந்து உயர்மட்டக் தூதுக் குழு
இலங்கை
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ், பிரதி அமைச்சரும், வெளிவிவகார அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகருமான மைக்கேல் ஆப்பிள்டன், பிரதி பிரதமரின் பணியாளர் குழாம் பிரதானி கலாநிதி ஜான் ஜோஹன்சன், நியூசிலாந்து வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பிரிவுகளுக்கான முகாமையாளர் திருமதி ஜோனா கெம்ப்கர்ஸ், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டன் மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி கேப்ரியல் ஐசக் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
இச்சந்திப்பின் போது “இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான ஆதரவை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியூசிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் வர்த்தகம், முதலீடு, தொழிற்கல்வி, மூன்றாம் நிலை கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) இன் கீழ் ஈடுபாடு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.























