கிளிநொச்சியில் புகையிரத கடவையை கடக்க முயன்ற நபர் விபத்தில் பலி
இலங்கை
கிளிநொச்சியில் புகையிரத கடவையை கடக்க முயன்ற நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (25) நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள புகையிரதத் கடவையினை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் மோதியுள்ளார்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொன்னளகு அனுசன்ராஜ் என்ற 28 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த புகையிரதம் சுமார் 30 நிமிடங்கள் வரை அப்பகுதியில் தரித்து நின்றதுடன், சடலம் உறவினர்களால் பொறுப்பேற்ற பின்னர் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
இதேவேளை, விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிக்கை முறையாக இயங்குவது இல்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
தானியங்கி சமிக்கை கட்டமைப்பில் ஏற்படும் கோளாறுகளால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.























