நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு
இலங்கை
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். சஹிலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகள் வைத்தியர் எஸ். ஜீவா தலைமையின்கீழ் நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நிந்தவூர் கல்முனை அல் மஸ்லம் வித்யாலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த டெங்கு நோய் தடுப்பு செயற்திட்டம் இன்று(26) நிந்தவூர் கல்முனை அல் மஸ்லம் வித்யாலய சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் இஷட் அகமட் பங்களிப்போடு நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம் .பைசால்,பொது சுகாதார பரிசோதகர் ஆர். நிதுர்சன் உட்பட பாடசாலையின் மேல் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர் .
இதன்போது டெங்கு நுளம்புகள் அற்ற பாதுகாப்பான பிரதேசமாக பாடசாலை சுற்றுச்சூழலை மாற்றி அமைக்கும் நோக்குடன் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் பாடசாலை சூழலில் உள்ள வீடுகளுக்கு சென்று பார்வையிடப்பட்டுள்ளது.
அத்துடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டு அழித்தொழிக்கப்பட்டதுடன் டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருகும் வகையில் சுற்றாடலை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டன.























