பகிடிவதை தொடர்பில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது
இலங்கை
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவன் ஹோமாகம பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 7 பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் அங்கு தங்கியிருந்த அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவரை பலமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காயமடைந்த பல்கலைக்கழக மாணவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.






















