அணு ஆயுதங்கள் உட்பட அனைத்தையும் பயன்படுத்தி இந்தியாவை தாக்குவோம் - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்
பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்கள் உட்பட தனது முழு பலத்தையும் பயன்படுத்தப்போவதாகப் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.
ரஷிய ஊடகமான ஆர்டிக்கு அளித்த பேட்டியில் ரஷியாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
பேட்டியில் பேசிய அவர், இந்திய ஊடகங்கள் தங்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன. இந்த விவாதங்களில் பங்கேற்க எங்களுக்கு ஆர்வம் இல்லை.
இருப்பினும், இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான ஆயுதங்கள் முதல் அணு ஆயுதங்கள் வரை எதையும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவோம் என்று கூறினார்.
முன்னதாக, பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாசியும் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். எல்லைகளில் 130 ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.























