• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவனத்தை ஈர்த்துள்ள ஈரான் ஜனாதிபதியின் விஜயம்

இலங்கை

ஈரான் ஜனாதிபதி நாளை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதற்காகவே அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளைய தினம் நாட்டுக்கு வருகைத் தரவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதற்காகவே அவர் வருகைத் தரவுள்ளார்.

உமா ஓயா பல்நோக்குத்திட்டம் 2011 ஆம் ஆண்டு ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கியின் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இருப்பினும் அதனைத்தொடர்ந்து பூகோள அரசியல், பொருளாதாரத் தடைகள் ஈரானில் தாக்கங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, உமா ஓயா திட்டத்துக்கான நிதி உள்நாட்டு திறைசேரி ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் புஹல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து சேகரிக்கப்படும் நீர், 4 கிலோமீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக டயரபா நீர்த்தேக்கத்துக்குச் செல்கிறது. அங்கிருந்து 15.5 கிலோமீற்றர் சுரங்கப்பாதை ஊடாக எல்ல, கரந்தகொல்ல பகுதியில் உள்ள 2 நிலத்தடி விசையாழிகளுக்குச் செல்கிறது.

இவ்விசையாழிகள் ஒவ்வொன்றும் 60 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், அவை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.

அதன்படி இத்திட்டத்தைத் திறந்துவைப்பதற்காக நாளை பிற்பகல் 2.00 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடையும் இவர், உமா ஓயா திட்டத்தைத் திறந்துவைத்தன் பின்னர், அன்றைய தினமே அவர் நாட்டிலிருந்து புறப்படுவார் எனவும் அறியமுடிகின்றது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இவரது இந்த விஜயமானது சர்வதேச ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.
 

Leave a Reply