• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொலைநோக்கு பார்வை இல்லாதவர்களுக்கு நிர்வாகத்தை கொடுக்காதீர்கள்

இலங்கை

தாம் ஆட்சிக்கு வந்தால் தமது கட்சியினருக்கு சில நீதி அதிகாரங்களை வழங்குவோம் என ஜே.வி.பி.யினர் தெரிவித்த  கூற்று கிராமங்களில் மீண்டும் காட்டுச்சட்டத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் 2 ஆவது பிராந்திய அலுவலகத்தை இன்று (8) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தாம் ஆட்சிக்கு வந்தால் தமது கட்சியினருக்கு ஓரளவு நீதித்துறை அதிகாரம் வழங்குவோம் என ஜே.வி.பி கூறியுள்ளமை, கிராமங்களில் மீண்டும் காட்டுச் சட்டத்தை ஏற்படுத்துவதற்குத் தயார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 88/89 சகாப்தத்தில் ஜே.வி.பி மக்களைக் கொன்று கிராமங்களில் காட்டுச் சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்பது மக்களுக்கு நன்றாக நினைவிருக்கும்.

அந்தக் காலத்தில் ஜே.வி.பி., கிராமத்துக்குச் சட்டத்தைக் கொண்டு வந்து அப்பாவி மக்களின் கை, கால்களை வெட்டி கொலை செய்தது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அந்த குழுக்களுக்கு மீண்டும் அதிகாரத்தை கொடுத்தால், அந்த பயங்கரமான சகாப்தம் மீண்டும் பிறக்கும். எனவே இந்தக் கதையை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆட்சியைப் பெறுவதற்காக கொலை செய்தவர்கள் ஆட்சியைப் பிடித்த பிறகும் அதே திட்டத்தைச் செய்ய முயற்சிக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் சென்று பேச்சுக்களை நடத்துகிறார். ஆனால் அநுரகுமார என்ன செய்கிறார் என்பதை நாட்டுக்கு சென்று கண்டுபிடியுங்கள். நாட்டுக்கு சென்று கட்சிக்கு கொடுக்கும் பணத்தை பாக்கெட்டில் கொண்டு வந்து விடுகிறார்.

இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேர்தல் இல்லாமல் இப்படியே இருப்போம் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி அவ்வாறு செய்ய முடியாது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தலைவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவது மக்களின் பொறுப்பு என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.  தொலைநோக்கு பார்வை இல்லாதவர்களுக்கு நாட்டின் நிர்வாகத்தை கொடுக்காதீர்கள்” இவ்வாறு பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply