இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிர் தப்பிய 50 பேர்கள் தற்கொலை
இஸ்ரேல் எல்லையில், நோவா இசை விழா படுகொலையில் இருந்து தப்பியவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற விவகார கூட்டத்தில் பேசிய ஒருவர், இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகமாக இருக்கலாம் என்றும், உயிர் தப்பியவர்கள் தற்போதும் தத்தளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
காஸா எல்லையில் இருந்து 3 மைல்கள் தொலைவில் தொடர்புடைய இசை விழா முன்னெடுக்கப்பட்டது. ஆனால் எவரும் எதிர்பாராமல் அந்த விழாவில் ஹமாஸ் படைகள் அத்துமீறியதுடன், நூற்றுக்கணக்கனவர்கள் கொல்லப்பட்டனர்.
பலர், துப்பாக்கி குண்டு துளைக்கப்பட்ட வாகனங்களில் பதுங்கி, உயிர் தப்பினர். வாகனங்களில் தப்பிய பலர் துரத்திச் சென்று கொல்லப்பட்டனர். நோவா விழாவில் பங்கேற்று உயிர் தப்பியவர்களில் பலர், குறைந்தது 50 பேர்கள் இதுவரை தற்கொலை செய்துகொண்டதாகவும்,
பலர் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாகவும், இன்னும் பலர் படுத்த படுக்கையாகவே உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பலரும் அந்த சம்பவத்திற்கு பின்னர் வேலைக்கு செல்லாமல் உள்ளனர் என்றும், அவர்களுக்கு தற்போது சிகிச்சையும் ஆதரவும் தேவை என்றும் கூறுகின்றனர்.
பலர் வேலைக்கு சென்றும், எதுவும் செய்ய முடியாமல் திரும்பியுள்ளனர். 24 வயதான இளைஞர் ஒருவர் சடலங்களுடன் ஒளிந்திருந்ததாகவும், சுமார் 8 மணி நேரம் உதவிக்காக காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் வெளியான தகவலை ஏற்க மறுத்துள்ளதுடன், நோவா இசை விழாவில் தப்பியவர்களில் 50 பேர்கள் தற்கொலை செய்துகொண்டதாக எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.