• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அல்-ஷிபா ஆஸ்பத்திரி முற்றிலும் அழிந்தது- உலக சுகாதார அமைப்பு கவலை

பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டேர் பலியாகி உள்ளனர்.

போரில் காசா பகுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளன. ஏராளமான கட்டிடங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன.

சமீபத்தில் காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவை சுற்றி கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டு வீச்சில் ஆஸ்பத்திரி கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் ஆஸ்பத்திரிக்குள் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தியது. சில நாட்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு இருந்த இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் அங்கிருந்து வெளியேறியது.

ஏற்கனவே அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய தாக்குதல்களால் முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்நிலையில் அல்-ஷிபா ஆஸ்பத்திரி முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம், எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, காசாவின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாக உள்ள அல்-ஷிபா ஆஸ்பத்திரி, சமீபத்திய தாக்குதலுக்கு பிறகு மனித கல்லறைகளுடன் காலியாக உள்ளது. அங்கு பலரது உடல்கள் கிடக்கின்றன.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. அல்லது சாம்பலாகிவிட்டன. குறுகிய காலத்தில் குறைந்தபட்ச செயல்பாட்டை மீட்டெடுப்பது கூட முடியாத செயலாக உள்ளது.

எஞ்சியிருக்கும் கட்டிடங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதா? என்பதை ஆராய வேண்டி உள்ளது என்றார்.

அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மருத்துவ கருவிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply